Sunday, October 18, 2009

தித்திக்காத தீபாவளி ! ! !

Efficient Frontier நேர் காணல் தந்த சின்ன மனக் கசப்புடனே தொடங்கியது தீபாவளி பயணம், Intel தோல்வியை தீபாவளி போர்வைக்குள் மறைத்துக் கொண்ட நண்பன் நிலவழகனுடன். சரி, அப்படி இப்படி என்று சமாளித்துக்கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தால்,
" எங்கிருந்தாலும் வாழ்க !" அப்படின்னு பாட வைத்தது உறவுக்கார நண்பனின் செய்தி.

அட, " போனால் போகட்டும் போடா" என மனதை தேற்றிக் கொண்டே கடை வீதியின் கலகலப்பை காணச் சென்றேன் நண்பர்கள் படை சூழ. பட்டினத்தின் சரி பாதி ஆண்மகன்கள் தண்ணிரில் மிதந்து கொண்டிருந்தனர். அங்காளி பங்காளி சண்டைகள், முன்பகைச் சண்டைகள் - இவையெல்லாம் பண்டிகை காலம் என்பதை நினைவு படித்திக் கொண்டிருந்தன.

நள்ளிரவு 12 தீபாவளி வாழ்த்துக்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு, ஆங்கில படத்தைச் சிறுது நேரம் பார்த்து விட்டு, தூங்கும் போது மணி 2.

ஒரு வழியாக, மறு நாள், உச்சி வெயிலில் தீபாவளியை வரவேற்றேன்.

நண்பன் கணேஷன், அலைபேசியில்,

" என்ன குரு, எப்ப வந்த ? தீபாவளி எல்லாம் வந்திருச்சா ?"

நான், " நமக்கு என்ன தீபாவளி? நமக்கு தீபவளினா அப்பா அம்மாவ பாக்கிறதுக்கு, புதுசு உடுத்துறதுக்கு, பசங்கள பாக்கிறதுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அவ்வளவு தான்." என்றேன் நாத்திக மனம் கமல.

கணேசன், " அட அதுதான் தீபாவளி" என முன்னோர்கள் பண்டிகை காலங்களை வைத்ததிற்காண காரணத்தை சொல்லாமல் சொன்னான்.

அம்மாவசை என்பதால், அம்மாவின் கறிக் குழம்பைத் தவிர, அதனையும் வழக்கமான தீபாவளியைப் போல். பலகாரங்கள், நண்பன் வீடு, சித்தி வீடு, வெடிச் சத்தம், நண்பர்களுடன் தெருவினில் அரட்டை. ஒரே ஒரு மாறுதல். எப்போதும் நண்பன் வீட்டு தொலைக்காட்சியில் காணும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள், இப்போது எனது வீட்டின் புது தொலைக்காட்சிப் பெட்டியில்.

அப்புறம் திரும்ப வந்த கோயம்புத்தூர் பயணத்தை மறக்கவே முடியாது. தீபாவளி தினம் ஆதலால் கூட்டமே இல்லை. மூன்று பேர் அமரும் இருக்கையில், தனி ஆளாக, பின் பனி காலம் ஆதலால் சற்றே குளிர்ந்த காற்று, மனதுக்கு பிடித்த பாடலைக் கேட்டுக்கொண்டு.............. அனந்த சயனத்தில் பயணித்த பயணத்தை மறக்கவே முடியாது.

எந்த ஒரு மறுதலையும் தராத, இத்தீபவளி ஒரு " தித்திக்காத தீபாவளியே !!!"